தமிழகத்திற்கு 25% இட ஒதுக்கீட்டை ஒன்றிய அரசு ஒதுக்காதது ஏன் ?சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி!

ஆர்டிஇ சட்டத்தின் கீழ் 25% இட ஒதுக்கீடு இடங்களுக்கு, தமிழகத்துக்கான நிதியை ஒன்றிய அரசு ஒதுக்காதது ஏன் என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு ஒதுக்கப்படும் 25% இட ஒதுக்கீட்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறவில்லை என்று தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு வழக்கு தொடரப்பட்டது.
இவ்வழக்கின் விசாரணை நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன், லட்சுமி நாரயணன் அமர்வு முன் நடைபெற்றது. அப்போது தமிழக அரசின் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், “தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு 25% இடங்கள் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது.
இந்த இடங்களுக்கான நிதியை ஒன்றிய அரசு ஒதுக்கவில்லை எனவும், 2021 முதல் 2023 ஆம் கல்வியாண்டு வரை எந்த நிதியும் ஒன்றிய அரசு ஒதுக்கவில்லை. வரும் மே 28 ஆம் தேதி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது” என்று வாதிட்டார்.
இதனைத் தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு, கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், தமிழகத்துக்கு ஒதுக்க வேண்டிய நிதி குறித்த விவரங்களை இன்று பிற்பகல் 2.15 மணிக்குள் ஒன்றிய அரசு சமர்ப்பிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.