முல்லைப்பெரியாறு அணை பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள ஒன்றிய அரசு அனுமதி தர வேண்டும்-உச்சநீதிமன்றம்!

முல்லைப்பெரியாறு அணையில் தமிழ்நாடு அரசு சார்பில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள ஒன்றிய அரசு அனுமதி தர வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முல்லைப்பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்கு அனுமதி வழங்க கேரள அரசுக்கு உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “முல்லைப் பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளுக்காக மரங்களை வெட்டுவதற்கு கேரளா முன்பு அனுமதி வழங்கியது என்றும், ஆனால் தற்போது, ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் அனுமதி கோர வேண்டும் என கேரளா தெரிவிக்கிறது. “என்றும் கூறினார். இதனை பதிவு செய்து கொண்ட உச்சநீதிமன்றம், “முல்லைப்பெரியாறு அணையில் தமிழ்நாடு அரசு பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள ஏதுவாக மரங்களை வெட்டுவதற்கு ஒன்றிய மற்றும் கேரள அரசுகள் 4 வாரங்களில் அனுமதி வழங்க வேண்டும் என்றும், ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் அனுமதியை கால நிர்ணயம் செய்து அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.
மேலும், மராமத்து பணிகளுக்கு பொருள்களை கொண்டு செல்ல வள்ளக்கடவு சாலையை சுற்றுசூழல் பாதிக்காதவாறு 4 வாரங்களில் கேரள அரசு சீரமைக்க வேண்டும் என்றும், பராமரிப்பு பணிகளுக்காக தமிழ்நாடு இரண்டாவதாக ஒரு படகை பயன்படுத்த கேரள அரசு அனுமதி வழங்க வேண்டும் என்றும், எஞ்சிய பிரச்சனைகள் குறித்து முடிவு செய்ய மேற்பார்வை குழு 4 வாரங்களில் முடிவெடுக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.