பஹல்காம் தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த இருவர் கைது !

பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காமில் உள்ள சுற்றுலா தளத்தில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான ‘தி ரெசிஸ்டண்ட் பிரண்ட்’ பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.

இந்த தாக்குதல் தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணைக்கு ஒன்றிய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. அதன்படி பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக என்.ஐ.ஏ. வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், தாக்குதல் நடைபெற்றபோது சம்பவ இடத்தில் இருந்தவர்கள், தாக்குதலில் இருந்து உயிர் தப்பியவர்களிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், பஹல்காம் தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்து உதவியதாக 2 பேரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்துள்ளனர். அதன்படி பஹல்காமின் பட்கோலே பகுதியை சேர்ந்த பர்வேஸ் அகமது மற்றும் பஹல்காமின் ஹில்பார்க் பகுதியை சேர்ந்த பஷீர் அகமது ஜோதார் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பை சேர்ந்தவர்கள் என்பதை கைது செய்யப்பட்டவர்கள் உறுதி செய்துள்ளனர் என்றும், கைது செய்யப்பட்ட இருவரும் பஹல்காம் தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகளுக்கு உணவு, இருப்பிடம், போக்குவரத்து உள்ளிட்ட வசதிகளை செய்து கொடுத்துள்ளனர் என்றும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Post A Comment

Your email address will not be published. Required fields are marked *

Leave a Reply

Related Posts