ஈரான் அமைதி பாதைக்கு திரும்பவில்லை எனில் தாக்குதல் தொடரும்-டிரம்ப் எச்சரிக்கை !

ஈரான் அமைதி பாதைக்கு திரும்பவில்லை எனில் தாக்குதல் தொடரும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இஸ்ரேல் மீது கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகள் எல்லை வழியே ஊடுருவி கொடூர தாக்குதல் நடத்தினர். இதில் மக்கள் பலர் கொல்லப்பட்டனர். பலர் பணய கைதிகளாக சிறை பிடிக்கப்பட்டனர். ஹமாஸ் அமைப்பை ஒழிக்கும் வரை ஓய போவதில்லை என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சூளுரைத்து உள்ளார்.
இதனை தொடர்ந்து, ஹமாஸ் அமைப்பை இலக்காக கொண்டு காசா மீது இஸ்ரேல் ஓராண்டுக்கும் மேலாக போர் தொடுத்து வருகிறது. இந்த சூழலில், ஈரான் நாடும் பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், கடந்த ஆண்டு அக்டோபரில் இஸ்ரேல் குடியிருப்புகளை இலக்காக கொண்டு, 200-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை கொண்டு தாக்குதல் நடத்தியது.
இஸ்ரேலும் அதற்கு பதிலடி கொடுத்தது. இதன்பின்னர் இரு நாடுகளுக்கு இடையேயான பதற்றம் தணிந்திருந்த சூழலில், திடீரென ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில் ஈரான் மீது கடந்த 13-ந்தேதி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. ஈரானின் அணு ஆயுத பயன்பாட்டுக்கு எதிரான தாக்குதல் இது என இஸ்ரேல் தெரிவித்தது. இதனை தொடர்ந்து ஈரானும் பதில் தாக்குதலில் ஈடுபட்டது. இதனால், 2 நாடுகள் இடையே போர் பதற்றம் அதிகரித்து காணப்படுகிறது.
இந்நிலையில், ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும் போரில் இறங்கியுள்ளது. ஈரானின் பர்தவ், நடான்ஸ் மற்றும் எஸ்பஹான் ஆகிய 3 அணு உலைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து, அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நாட்டு மக்களுக்கு இந்திய நேரத்தின்படி இன்று காலை டிரம்ப் உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், பயங்கரவாதத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் முன்னணி நாடாக ஈரான் உள்ளதாகவும், இந்த நிலை தொடர கூடாது. அதற்கு பதிலாக அமைதி நிலவ வேண்டும் என்றும் தெரிவித்தார். ஈரானின் முக்கிய அணுசக்தி மையங்கள் தாக்கி அழிக்கப்பட்டு விட்டன என்றும் ஈரானில் உள்ள அணு உட்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தி அவை தகர்க்கப்பட்டு உள்ளதாகவும், ஈரானில் சில இலக்குகளை நாங்கள் தாக்காமல் விட்டு வைத்துள்ளோம் என்றும் அவர்கள் அமைதி பாதைக்கு திரும்ப வேண்டும். அப்படி இல்லையென்றால், ஈரானில் மீதமுள்ள இலக்குகளையும் தாக்குதல் நடத்தி தகர்ப்போம் என்றும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறினார்.