தூத்துக்குடி|சங்கு குளிக்க கடலுக்கு சென்ற மீனவர் மூச்சுத் திணறி உயிரிழப்பு !

தூத்துக்குடி, அருகே, சங்கு குளிக்க கடலுக்கு சென்ற மீனவர் ஒருவர், மூச்சுத் திணறி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் திரேஸ்புரத்தைச் சார்ந்த மாரியப்பன் மகன் மாயாண்டி, சங்கு குளிக்கும் மீனவராக இருந்து வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று காலை வழக்கம் போல், கனி என்பவரது படகில் ஆறு பேருடன் சென்ற மாயாண்டி, நடுக்கடலில் சங்கு குளிக்கும் தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக மூச்சுத் திணறல் ஏற்பட்டு மாயாண்டி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து சக மீனவர்கள் அவரது உடலை மீட்டு தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரைக்கு கொண்டு வந்தனர்.
தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
சங்கு குளிக்கும் மீனவர் மாயாண்டி நடுக்கடலில் உயிரிழந்தது தொடர்பாக, கடலோர பாதுகாப்பு குழும போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.