தமிழகத்தில் அடுத்த 2 நாட்கள் வெப்பம் அதிகரிக்கும் – சென்னை வானிலை ஆய்வு மையம் !

தமிழகத்தில் அடுத்த 2 நாட்கள் வெப்பநிலை உச்சத்தை தொடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
இது தொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலைக்கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக இன்றும் நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் 13ம் தேதி முதல் 16ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், அதிகபட்ச வெப்பநிலை 38° டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28° டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதேபோல் அடுத்த 2 நாள்களுக்கு தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளிலும், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளிலும் மணிக்கு 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால்மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.