தமிழ்நாடு | நேற்று நள்ளிரவில் இருந்து மீன் பிடி தடைக்கலாம் அமல் !

தமிழ்நாட்டில் நேற்று நள்ளிரவு முதல் மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வந்துள்ளதால் மீன்களின் விலை கணிசமாக உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குப்படுத்தும் சட்டத்தின்கீழ், தமிழகத்தில் கிழக்கு கடற்கரை வங்கக்கடல் பகுதியில் மீன்களின் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டும், மீன் வளத்தை பாதுகாக்கும் நோக்கத்துடனும் மீன்பிடி தடைக்காலம் ஆண்டுதோறும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

குறிப்பாக, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ஆழ்கடலில் மீன்கள் முட்டையிட்டு குஞ்சு பொரித்து இனப்பெருக்கம் செய்யும் காலமாகும்.
இந்த காலங்களில் விசைப்படகுகள் ஆழ்கடலில் சென்று மீன்பிடித்தால் மீன் இனம் அழிந்துவிடும் என்று கருதி மீன்பிடிக்க தடை விதிக்கப்படுகிறது.
அதன்படி இந்தாண்டும், கன்னியாகுமரி முதல் திருவள்ளூர் மாவட்டம் வரையிலான தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதியில் நேற்று நள்ளிரவு 12 மணி முதல் வரும் ஜூன் 14-ந் தேதி வரை 61 நாட்கள் விசைப்படகுகள் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு முழுவதும் மீன்பிடி தடைக்காலம் நள்ளிரவு முதல் அமலுக்கு வரவுள்ளதால் மீன்களின் விலை கணிசமாக உயர வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் சுமார் 1.45 லட்சம் மீனவர்கள் மீன்பிடி தொழிலை நம்பியுள்ளதால், தடைகாலம் காரணமாக கடலுக்கு செல்லாத மீனவர்களுக்கு தமிழக அரசு தலா ரூ.8000 நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளது.