கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து விண்ணில் பாய்ந்த ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் விண்கலம்!

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து இன்று ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் விண்கலம் திட்டமிட்டபடி விண்ணிற்கு புறப்பட்டது.
இஸ்ரோ, நாசா மற்றும் ஆக்சியம் ஸ்பேஸ் நிறுவனங்களின் கூட்டு முயற்சியாக , சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு மனிதர்களை அனுப்பும் ஆக்சியம்-4 திட்டம் கடந்த 11ம் தேதி செயல்படுத்தப்பட இருந்தது.
இந்த விண்வெளி பயணத்தில், இந்திய விண்வெளி வீரர் சுக்லாவுடன், அமெரிக்கா , ஹங்கேரி, போலந்தை சேர்ந்த வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் பால்கன்-9 ராக்கெட் மூலம் ஏவப்படவிருந்த இந்த பயணம், மோசமான வானிலை, ஆக்சிஜன் கசிவு உள்ளிட்ட பல்வேறு கோளாறு காரணமாக அடுத்தடுத்து 6 முறை ராக்கெட் ஏவுதல் தள்ளிவைக்கப்பட்டது.
இந்த நிலையில் திட்டமிட்டபடி, இன்று நண்பகல் 12.01 மணிக்கு புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஸ்பேஸ் எக்ஸின் பால்கன் 9 ராக்கெட் மூலமாக டிராகன் விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. பால்கன் 9 ராக்கெட்டில் இருந்து வெற்றிகரமாக பிரிந்த முதல்கட்ட எஞ்சின், பூமிக்கே திரும்பியது.
புவிவட்டப்பாதைக்குள் நுழைந்த பால்கன் ராக்கெட், புறப்பட்ட 8 நிமிடங்களில் முதல் கட்டத்தை கடந்தது. நாளை மாலை 4.30 மணிக்கு சர்வதேச விண்வெளி நிலையத்தை விண்கலம் சென்றடைகிறது. 4 வீரர்களும் 14 நாட்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்து ஆய்வு செய்யவுள்ளனர்.
இந்த பயணத்தின்போது 60 விதமான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் மூலம் 41 ஆண்டுகளுக்குப் பிறகு விண்வெளி செல்லும் இந்தியர் என்ற சாதனையை சுபான்ஷு சுக்லா படைக்க உள்ளார். சுபான்ஷு சுக்லாவின் குடும்பத்தினர் உத்திரப்பிரதேச மாநிலம் லக்னோவில் இருந்தபடி திரையில் கண்டு நெகிழ்ச்சி அடைந்தனர். 1984ல் விண்வெளி நிலையத்துக்கு சென்ற ரஷ்யாவின் சோயுஸ் விண்கலத்தில் இந்தியரான ராகேஷ் சர்மா பயணித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.