ஐபிஎல் கிரிக்கெட் ஆட்டத்தில் இன்று பஞ்சாப் கிங்க்ஸ்-சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிகள் மோதல் !

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பஞ்சாப்பில் இன்று இரவு நடைபெறும் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்க்ஸ்-சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிகள் மோதுகின்றன.

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இதில் பஞ்சாப் மாநிலம் முல்லாப்பூரில் இரவு 7.30 மணிக்கு அரங்கேறும் 22-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ், 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான பஞ்சாப் அணி முதலாவது ஆட்டத்தில் 11 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத்தையும், 2-வது ஆட்டத்தில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் லக்னோவையும் தோற்கடித்தது. கடந்த ஆட்டத்தில் 50 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தானிடம் வீழ்ந்தது.

உள்ளூரில் தனது முதல் ஆட்டத்தில் தோல்வியை தழுவிய பஞ்சாப் அணி வெற்றிப்பாதைக்கு திரும்பும் ஆர்வத்தில் உள்ளது.

அதே சமயம் நடப்பு சீசனில் தொடக்க ஆட்டத்தில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பையை வென்ற சென்னை அணி அதன் பிறகு நடந்த ஆட்டங்களில் 50 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூருவிடமும், 6 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தானிடமும், 25 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லியிடமும் அடுத்தடுத்து தோற்றது. கடந்த 3 ஆட்டங்களிலும் 180-க்கு மேலான ரன்னை விரட்டிப்பிடிக்க முடியாமல் முடங்கியது.

எனவே, தொடர்ந்து 3 தோல்விகளை சந்தித்த சென்னை அணி வெற்றி பாதைக்கு திரும்ப முனைப்பு காட்டும். வெற்றிப் பாதைக்கு திரும்ப இரு அணிகளும் கடுமையாக மல்லுக்கட்டும் என்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது. இருப்பினும் உள்ளூர் சூழலில் பஞ்சாப் அணியின் கையே ஓங்க அதிக வாய்ப்புள்ளது.

முன்னதாக கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் மாலை 3.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் சந்திக்கின்றன.

நேற்று முன்தினம் நடக்க இருந்த இந்த ஆட்டத்துக்கு ராமநவமி கொண்டாட்டம் காரணமாக பாதுகாப்பு அளிக்க முடியாது என்று கொல்கத்தா போலீசார் கைவிரித்ததால் 2 நாள் தள்ளிவைக்கப்பட்டு இன்று நடைபெறுகிறது.

Post A Comment

Your email address will not be published. Required fields are marked *

Leave a Reply

Related Posts