நாளை தொடங்குகிறது நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் !

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நாளை தொடங்க உள்ள நிலையில் முக்கிய பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
பரபரப்பான அரசியல் சூழலில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நாளை தொடங்குகிறது. ஆகஸ்ட் 21- ந் தேதி வரை இந்த கூட்டத் தொடர் நடைபெறுகிறது.
ஏப்ரலில் நடந்த பகல்காம் பயங்கரவாத தாக்குதல், அதற்குப் பதிலடியாக மே மாதம் பாகிஸ்தான் மீது மேற்கொள்ளப்பட்ட ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை மற்றும் இரு நாடுகளின் ராணுவ மோதலுக்கு பிறகான முதல் கூட்டத் தொடா் என்பதால் முக்கியத்துவம் பெற்று உள்ளது.
ஆபரேஷன் சிந்தூர், டிரம்பின் பேச்சு,பீகாரில் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை மீறி நடை பெற்றுவரும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள், சீன எல்லை விவகாரம், மணிப்பூருக்கு பிரதமா் மோடி இதுவரை பயணம் மேற்கொள்ளாதது, நாட்டையே உலுக்கிய அகமதாபாத் விமான விபத்து, விவசாயிகள் பிரச்சினை உள்ளிட்ட விவகாரங்களும் முக்கியமாக எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இந்த மழைக்கால கூட்டத் தொடரில் 8 புதிய மசோ தாக்களை அறிமுகப்படுத்த ஒன்றிய அரசு திட்டமிட்டு உள்ளது. இதனால், மழைக்கால கூட்டத்தொடர் முழுவதும் அனல்பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது