காங்கோவில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 100-கும் மேற்பட்டோர் உயிரிழப்பு !

காங்கோ நாட்டில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
ஆப்பிரிக்க நாடான காங்கோவில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி, தெற்கு கிவு மாகாணத்தில் கனமழை பெய்துள்ளது.
இதன் காரணமாக நங்கன்ஜா நகரில் உள்ள டாங்கன்யிகா உள்பட பல ஏரிகள் நிரம்பியுள்ளன. தொடர்ந்து கனமழை பெய்ததால் ஏரியின் கரை உடைந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால் ஏரிக்கரையோரம் அமைந்துள்ள கசாபா கிராமத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சுமார் 150 வீடுகள் சேதமடைந்துள்ளன.
இந்த வெள்ளப்பெருக்கு மற்றும் கட்டிட இடிபாடுகளில் சிக்கி பலர் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். இதனையடுத்து மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில் வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக காங்கோ அரசு தெரிவித்துள்ளது.
தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் நீரினால் ஏற்படும் நோய் தொற்றுகளால் மக்கள் பாதிக்கப்படுவதாகவும், ஊட்டச்சத்து குறைபாடு போன்ற ஆபத்து அதிகரித்து வருவதாகவும் காங்கோ அரசு கவலை தெரிவித்துள்ளது.