காரைக்குடி கோவில் திருவிழாவில் மஞ்சுவிரட்டுப் போட்டி கோலாகலம்!

காரைக்குடி அருகே, கோவில் திருவிழாவையொட்டி நடைபெற்ற மஞ்சுவிரட்டுப் போட்டியில் நூற்றுக்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்று சீறிப்பாய்ந்தன.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே, இலுப்பக்குடி புது குடியிருப்பு பகுதியில் உள்ள தர்ம முனிஸ்வரர் பூச்செரிதல் விழாவையொட்டி மஞ்சுவிரட்டு நடைபெற்றது.
இதில், சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 100-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. கோவில் காளைக்கு முதல் மரியாதை செய்த பின், வாடிவாசலில் இருந்து ஒவ்வொரு காளையாக அவிழ்த்து விடப்பட்டன.
வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்த காளைகளை வீரர்கள் அடக்க முயன்றனர். அதைத் தொடர்ந்து வெற்றிபெற்ற காளைகளுக்கும், வீரர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
இதனிடையே, மஞ்சுவிரட்டில் காளைகள் முட்டியதில் 5 பேர் லேசான காயமடைந்தனர். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த மஞ்சுவிரட்டைக் காண இலுப்பக்குடி, அரியக்குடி, மாத்தூர், லட்சுமி நகர் உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த ஏராளமானோர் வந்திருந்தனர்.