நிதி ஆயோக் கூட்டத்திற்குப் பிறகு இன்று பிரதமர் மோடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திக்க உள்ளதாக தகவல் !

டெல்லி சென்றுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நிதி ஆயோக் கூட்டத்திற்குப் பிறகு இன்று மாலை பிரதமரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார்.
பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெற உள்ள நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க டெல்லி சென்றுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நேற்று மாலை காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். டெல்லி ஜன்பத்தில் உள்ள இந்த சந்திப்பின்போது, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உடனிருந்தார்.

இந்த சந்திப்பு குறித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். அதில், சோனியா, ராகுல் உடனான ஒவ்வொரு சந்திப்பிலும் ஒரு சிறப்பு அரவணைப்பு இருக்கிறது என்றும் அவர்களைச் சந்தித்தது உண்மையிலேயே குடும்பத்துடன் இருப்பது போன்ற உணர்வை அளிக்கிறது என்றும் பதிவிட்டுள்ளார்.
இதனிடையே, நிதி ஆயோக் கூட்டத்தின் இடைவேளையின்போது பிரதமர் மோடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பார் எனக் கூறப்படுகிறது. அப்போது தமிழகத்திற்கு தேவையான நிதியை அளிக்க வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.