பெங்களூர் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோர் குடும்பத்துக்கு நிவாரணம்-கர்நாடக முதல்வர் சித்தராமையா அறிவிப்பு !

பெங்களூர் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோர் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க கர்நாடக முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் பெங்களூர் அணி முதல் முறையாக வெற்றி பெற்று கோப்பையை வென்றது. இதையடுத்து, பெங்களூரில் ஆர்.சி.பி அணிக்கு பாராட்டு விழா நடைபெற்றது. அப்போது வீரர்களைக் காண லட்சக்கணக்கான ரசிகர்கள் குவிந்ததால், அங்கு கடும் கூட்ட நெரிசல் உண்டானது.
இந்த நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில் பெங்களூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்து அம்மாநில முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார்.
கூட்ட நெரிசலில் படுகாயமடைந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்த சித்தராமையா, பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர் சின்னசாமி மைதானத்தின் வெளியே மட்டும் சுமார் 3 லட்சம் ரசிகர்கள் குவிந்து இருந்தனர் என்றும் விசாரணை அடிப்படையில் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் 15 நாட்களுக்குள் விசாரித்து அறிக்கை அளிக்க விசாரணை ஆணையத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றும் கூறினார். இதனிடையே, இந்த உயிரிழப்புகளுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.