சென்னையில் பள்ளி நேரங்களில் கனரக வாகனங்கள் செல்ல தடை -காவல் ஆணையர் அருண் உத்தரவு !

சென்னையில், மாணவர்கள் பள்ளிக்குச் சென்று வரும் நேரங்களில் தண்ணீர் லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் வரக்கூடாது என தடை விதித்து சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலை, வாக்கின்ஸ் தெரு சந்திப்பில், சிறுமி சவுமியா, இருசக்கர வாகனத்தில் தாயுடன் அமர்ந்து சென்றார். அப்போது பின்னால் வேகமாக வந்த தண்ணீர் லாரி சவுமியா மீது ஏறி இறங்கியது. இதில் சிறுமி தலை நசுங்கி அதே இடத்திலேயே உயிரிழந்தார். பள்ளி வேலை நேரங்களில் தண்ணீர் லாரி வந்ததுதான் சிறுமி உயிரிழப்புக்கு காரணம் என தெரியவந்தது.
இந்த நிலையில், சென்னை பெருநகர காவல் எல்லையில், பள்ளி வேலை நேரமான காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை, அதேபோல் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை தண்ணீர் லாரி உள்பட எந்தவித கனரக வாகனங்களும் உள்ளே வர அனுதிக்க கூடாது என்றும் இந்த கட்டுப்பாட்டை முறையாக கடைபிடிக்க வேண்டும் என்றும் பள்ளி, கல்லூரிகள் அமைந்துள்ள பகுதிகளில் கனரக வாகனங்கள் உள்ளே வருவதை போக்குவரத்து போலீசார் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார்.
அதோடு, விபத்து தொடர்பாக பறிமுதல் செய்யப்படும் வாகனங்களை 100 நாட்கள் வரை விடுவிக்க கூடாது என்றும் இந்த நடைமுறையை சரியாக பின்பற்றவில்லை என்றால் சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அருண் எச்சரிக்கை விடுத்துள்ளார்.