பெங்களூருவில் கொட்டித் தீர்த்த கனமழை – மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு !

பெங்களூருவில் கொட்டித் தீர்த்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் முழுவதும் பருவமழைக்கு முந்தைய மழை பரவலாக பெய்து வருகிறது. குறிப்பாக கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.
இதன் தொடர்ச்சியாக பெங்களூரு நகரிலும் கடந்த சில நாட்களாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதன் காரணமாக சாலைகள் வெள்ளக்காடாக மாறி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில் பெங்களூருவில் நேற்று இரவும் நகரின் பல பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால், சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதுடன், வாகனங்கள் வெள்ளத்தில் மிதந்து செல்வதைப் போல் காட்சி அளித்தது.

மேலும், சில சாலைகளில் பள்ளங்கள் தெரியாத அளவுக்கு 3 அடி உயரத்துக்கு மேல் தண்ணீர் தேங்கி நின்றதால், இருசக்கர வாகனங்கள் பள்ளத்தில் விழுந்தன. வாகன ஓட்டிகளும் கீழே விழுந்த சம்பவமும் நடந்துள்ளது.
இந்த மழையின் காரணமாக எம்.ஜி.சாலை, விதான் சவுதா, சாந்தி நகர், கே.ஆர்.பகுதியைச் சுற்றி தண்ணீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மேலும், புறநகர் பகுதியில் ஏராளமான குடியிருப்பு பகுதியில் தண்ணீர் சூழ்ந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பெங்களூரு நகருக்கு வருகின்ற 22-ம் தேதி வரை மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.