கேரள முன்னாள் முதலமைச்சர் வி.எஸ்.அச்சுதானந்தன் உடல்நலக் குறைவால் காலமானார்!

கேரள முன்னாள் முதலமைச்சர் வி.எஸ்.அச்சுதானந்தன் உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 102.
வி.எஸ்.அச்சுதானந்தன் ஆலப்புழாவில் உள்ள புன்னப்புராவில் 1923ம் ஆண்டு அக்டோபர் 20ம் தேதி பிறந்தார். 4 வயதிலேயே தாயையும் 11 வயதில் தனது தந்தையையும் இழந்த அவர் 23வது வயதிலேயே புன்னப்புரா போராட்டத்தின் மிக முக்கியமான போராளிகளில் ஒருவராக திகழ்ந்தார்.
1938ம் ஆண்டில் காங்கிரஸில் சேர்ந்த அச்சுதானந்தன் கருத்து வேறுபாட்டால் 1940ம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். 1964ம் ஆண்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இரண்டாக உடைந்த போது மார்க்சிஸ்ட் கட்சியை தொடங்கியவர்களில் அச்சுதானந்தனும் ஒருவர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரளா மாநிலச் செயலாளராக 1980-1992ம் ஆண்டு வரை இருந்தார்.. 1992-1996, 2001-2006, 2011-2016ல் கேரளாவின் எதிர்க்கட்சித் தலைவராக வி.எஸ்.அச்சுதானந்தன் இருந்தார். 2006 முதல் 2011ம் ஆண்டு வரை கேரளாவின் முதலமைச்சராக அச்சுதானந்தன் இருந்தார்.
இந்நிலையில். ஜூன் 23ம் தேதி உடல்நலக் குறைவால் திருவனந்தபுரம் தனியார் மருத்துவமனையில் அச்சுதானந்தன் அனுமதிக்கப்பட்டார். இவரது உடல்நிலை குறித்து கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் மருத்துவமனை சென்று கேட்டறிந்த நிலையில்,கேரள முன்னாள் முதலமைச்சர் வி.எஸ்.அச்சுதானந்தன் காலமானார்.
இதனையடுத்து மார்க்சிஸ்ட் தலைமை அலுவலகமான ஏகேஜி பவனில் அச்சுதானந்தன் உடல் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. திருவனந்தபுரம் தலைமைச் செயலக தர்பார் ஹாலில் நாளை அச்சுதானந்தன் உடல் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. நாளை மறுநாள் ஆலப்புழாவில் உள்ள சொந்த ஊரில் இறுதிச் சடங்கு முடிந்த பின் தகனம் செய்யப்பட உள்ளது.