திரைப்பட இயக்குனர் வேலுபிராபகரன் உடல்நலக் குறைவால் காலமானார்!

திரைப்பட இயக்குனர் வேலுபிராபகரன் உடல்நலக் குறைவால் காலமானார்.
1989-ம் ஆண்டில் வெளியான நாளைய மனிதன் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனவர் வேலு பிரபாகரன். இதைத்தொடர்ந்து சத்யராஜ் நடித்த பிக்பாக்கெட், பிரபு நடித்த உத்தமராசா, மோகன் நடித்த உருவம் போன்ற படங்களுக்கும் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்துள்ளார்.
பின்னர், அசுரன், கடவுள், புதிய ஆட்சி, புரட்சிக்காரன் போன்ற சமூகம் சார்ந்த கருத்துகள் நிறைந்த படத்தையும் இயக்கி நற்பெயரை எடுத்துள்ளார். 68 வயதான வேலு பிரபாகரனுக்கு கடந்த மாதம் மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு வெண்டிலேட்டர் மூலம் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது. மேலும் மருத்துவர்கள் எவ்வளவோ முயற்சித்தும் அவரது உடல் சிகிச்சைக்கு ஒத்துழைக்க மறுப்பதாகவும், அவரது உடல்நிலை மோசமாகிக் கொண்டே போவதாகவும் தெரிவித்தனர்.
இந்நிலையில், இன்று காலை 5.30 மணிக்கு சிகிச்சை பலனின்றி வேலு பிரபாகரன் காலமானார். இதனையடுத்து, வளசரவாக்கத்தில் உள்ள வீட்டில் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. அவரது மறைவுக்கு திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.