முதலமைச்சர் ஸ்டாலின் டெல்லி பயணம் | சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ள பிரேமலதா விஜயகாந்த்!

பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் ஸ்டாலின் டெல்லி பயணம் குறித்து பல்வேறு கேள்விகளை முன்வைத்து வருகின்றார்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லிக்கு நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளார்.
இந்தநிலையில், மு.க.ஸ்டாலினின் இந்த பயணத்தை குறித்து பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார் .
2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க டெல்லி செல்கின்றார்.அது ஒருபுறம் இருக்க திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் அமைச்சர்கள் மட்டுமே நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொண்ட நிலையில் தற்போது, மு.க.ஸ்டாலின் செல்வது அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகி உள்ளது.
மத்திய பாஜக அரசிற்கும், மாநில திமுக அரசிற்கும் இடையில் மோதல் போக்கு நிலவி வரும் சூழலில் நிதி ஆயோக் கூட்டத்தை மு.க.ஸ்டாலின் தவிர்த்திருந்தார். இந்நிலையில் தற்போது தானே செல்வது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்கட்சிகள் ஸ்டாலின் டெல்லி பயணம் குறித்து பல்வேறு கேள்விகளை முன்வைத்து வருகின்றனர்.
இந்நிலையில், நாமக்கல்லில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், கடந்த நான்கு ஆண்டுகளாக டெல்லியில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கவில்லை.அப்படி இருக்கையில் தற்போது மட்டும் எதற்காக டெல்லி செல்கிறார். ஆட்சியாளர்கள் வீடுகளில் ரெய்டு நடக்கும் போது ஸ்டாலின் ஏன் டெல்லி செல்ல வேண்டும். திமுக அரசு பல வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. நீட் தேர்வை ஒழிப்போம். டாஸ்மாக்கை ஒழிப்போம் என்று கூறியதை திமுக நிறைவேற்றவில்லை. இன்னும் பல பொய்களை சொல்லி 2026ஆம் ஆண்டு ஆட்சிக்கு வர முயல்வார்கள். நாம் ஏமாறக் கூடாது என்று கேட்டுக் கொண்டார். மருத்துவமும், கல்வியும் வியாபாரமாகி விட்டது.
அதுமட்டுமின்றி தற்போது தமிழ்நாட்டில் மது, கஞ்சா விற்பனை கொடி கட்டி பறக்கிறது. வரிகள் உயர்வு, விலைவாசி உயர்வால் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர். இவர்களுக்கு வரும் தேர்தலில் முடிவு கட்ட வேண்டும் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி பயணத்தின் பின்னணியில் அரசியல் கணக்குகள் ஏதேனும் இருக்கிறதா? என்ற கேள்வி எழுகிறது. தற்போது திமுக அமைச்சர்கள் பலரை குறிவைத்து ரெய்டு, வழக்கு, விசாரணை என நடந்து கொண்டிருக்கிறது. இதிலிருந்து விடுவித்து கொள்ளும் முயற்சியா? என்ற கேள்வியை அரசியல் பார்வையாளர்கள் முன்வைக்கின்றனர் என தெரிவித்துள்ளனர்.