பெங்களூரு கூட்ட நெரிசல் சம்பவம்|காவல் ஆணையர் உள்பட 5 உயரதிகாரிகள் பணியிடை நீக்கம் !

பெங்களூரு கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக பெங்களூரு காவல் ஆணையர் உள்பட 5 உயரதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்து கர்நாடக முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.
பெங்களூரு அணியின் முதல் ஐபிஎல் கோப்பை கனவு நிறைவேறியதையடுத்து, அதை கொண்டாடுவதற்கு நேற்று முன் தினம் சின்னசாமி மைதானத்தில் வெற்றிப் பேரணி நடத்தப்பட்டது. இதில் கட்டுக்கடங்காத ரசிகர்கள் குவிந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 11 பேர் உயிரிழந்தனர். மேலும் 47 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது குறித்து நீதி விசாரணை நடத்தபடும் என அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா கூறியுள்ளார். அதன்படி, நேற்று இது தொடர்பான வழக்கு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, கூட்டம் கூட அனுமதி கொடுத்தது மற்றும் பாதுகாப்பு ஏற்பாடு தொடர்பாக சரமாரி கேள்வி எழுப்பபட்டது. இதனிடையே அம்மாநில அரசு சார்பிலும், பெங்களூரு அணி நிர்வாகம் சார்பிலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்திருக்கு தலா ரூ. 10 லட்சம் இழப்பீடு அறிவிக்கப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பாக பெங்களூரு அணி நிர்வாகம் மீது கப்பன் பார்க் காவல் நிலையத்தில், 8 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும் இந்த வழக்கில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களான டிஎன்ஏ என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் மற்றும் கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கத்தின் நிர்வாகக் குழு பெயரும் சேர்க்கப்பட்டது.
இந்த நிலையில், பெங்களூரு காவல் ஆணையர் பி. தயானந்தா, கூடுதல் ஆணையர் விகாஸ் குமார், மத்திய துணை ஆணையர் சேகர், ஒரு ஏசிபி & கப்பன் பார்க் காவல் ஆய்வாளர் ஆகியோர் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
இதனிடையே, இது தொடர்பாக, முன்னாள் கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹாதலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட உள்ளதாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.