தென்காசி காசிவிஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேகத்துக்கு தடை !

தென்காசி காசிவிஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேகத்துக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தென்காசியைச் சேர்ந்த நம்பிராஜன், உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

அதில், “தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலில் ஏப்ரல் 7-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது என்றும் சமீபத்தில் கோயிலில் நூறு டிராக்டருக்கும் மேல் மண் அள்ளப்பட்டது என்றும் இதனால் கோயில் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது என்றூம் இதனால், கோயில் பாதுகாப்பை உறுதிசெய்ய அரசு நிதி ஒதுக்கியது என்றும் இந்த நிதி முறையாக செலவிடப்படவில்லை என்றும் அரசின் நிதியில் மோசடி செய்யப்பட்டதுடன், கோயிலின் ஸ்திரத்தன்மையும் கேள்விக்குறியாகியுள்ளது என்றும் இது தொடர்பாக பக்தர்கள் அளித்த புகார்கள் விசாரிக்கப்பட்ட போது கோயில் பணிகளை முழுமையாக முடிக்காமல் அரசின் நிதியில் மோசடி செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது என்றும் இருப்பினும் சம்பந்தப்பட்டவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் கோயில் ராஜகோபுரத்தில் பழுது சரி செய்யப்படாமலேயே வண்ணம் பூச்சு பணி நிறைவடைந்துள்ளது” என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவை நீதிபதிகள் ஜெ.நிஷாபானு, எஸ்.ஸ்ரீமதி அமர்வு விசாரித்தது. அரசு தரப்பில், திருப்பணிகள் நூறு சதவீத பணிகள் முடிவடைந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது.
மனுதாரர் தரப்பில், கோயில் புனரமைப்பு பணிகள் முழுமையாக நிறைவடையவில்லை. அதற்கு முன்ப கும்பாபிஷேகம் நடத்துவது பக்தர்களின் பாதுகாப்புக்கு ஆபத்தாக அமையும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள், கோயில் புனரமைப்பு பணிகள் முழுமையாக நிறைவடையும் முன்பு கும்பாபிஷேகம் நடத்துவது சரியல்ல என்றும் எனவே கும்பாபிஷேகத்துக்கு இடைக்கால தடை விதித்தும், கோயில் புனரமைப்பு பணிகள் குறித்து சென்னை ஐஐடி குழு மற்றும் வழக்கறிஞர் ஆணையர் ஆகியோர் ஆய்வு நடத்தி ஏப். 21-ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.