அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கு | குற்றவாளி ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை – மகளிர் நீதிமன்றம் அதிரடி !

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில் ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த 2024-ம் ஆண்டு டிசம்பர் 23-ந் தேதி இரவு மாணவி ஒருவரை அந்த பகுதியைச் சேர்ந்த ஞானசேகரன் என்பவர் பாலியல் கொடுமை செய்தார். இதுகுறித்து மறுநாள் பாதிக்கப்பட்ட மாணவி கொடுத்த புகாரின் அடிப்படையில் கோட்டூர்புரம் போலீசார் ஞானசேகரனை கைது செய்தனர்.
இதனையடுத்து, இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், வி.லட்சுமிநாராயணன் ஆகியோர், பாலியல் வன்கொடுமை வழக்கை விசாரிக்க ஐ.பி.எஸ். அதிகாரிகள் சினேகபிரியா, பிருந்தா, ஐமான் ஜமால் ஆகியோர் கொண்ட சிறப்பு புலன் விசாரணைக்குழுவை அமைத்து உத்தரவிட்டது. இதனைத்தொடர்ந்து, இந்த வழக்கை விசாரித்த சிறப்பு புலனாய்வுக்குழு அதிகாரிகள், கடந்த பிப்ரவரி மாதம் 24-ந் தேதி சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர்.
பின்னர் இந்த வழக்கு சென்னை மகளிர் நீதிமன்றத்திற்கு கடந்த மார்ச் 7-ந் தேதி மாற்றப்பட்டது. இந்த வழக்கின் சாட்சிகள் விசாரணை ஏப்ரல் 23-ந் தேதி முதல் தொடங்கி, தினந்தோறும் என்ற அடிப்படையில் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டது. இதில், 75 சாட்சி ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டதுடன், 29 பேர் சாட்சியம் அளித்தனர்.

அனைத்து தரப்பு வாதங்களும் கடந்த 20-ந் தேதி முடிவடைந்ததையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பு கடந்த வாரம் வழங்கப்பட்டது. சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி அளித்த தீர்ப்பில், அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்ட அனைத்து பிரிவுகளிலும் ஞானசேகரன் குற்றவாளி என தீர்ப்பு அளித்தார்.
மேலும், ஞானசேகரனுக்கான தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்படும் என்றும் அறிவிக்கப்படும் என்றும் உத்தரவிட்டார். இதனிடையே, ஞானசேகரன் தொடர் குற்றவாளி, அவருக்கு கருணை காட்ட கூடாது என்று அரசு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து, அம்மாவையும் சகோதரியையும் பார்த்துக்கொள்ள வேண்டும, குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்றும், முடக்கப்பட்ட வங்கி கணக்குகளை விடுவிக்க வேண்டும் என்று ம்ஞானசேகரன் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்தநிலையில், இந்த வழக்கில் குற்றவாளி ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி ராஜலட்சுமி உத்தரவிட்டார். மேலும் ஞானசேகரனுக்கு 90 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தும், 30 ஆண்டுகள் எந்த தண்டனையும் குறைப்பும் இன்றி ஆயுள் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.