தமிழக காவல்துறையின் ஒழுங்கு விதிகளை மீறி, சீருடையில் சமூக வலைதள ரீல்ஸ் பதிவிட்ட போக்குவரத்து உதவி ஆய்வாளர்மீது நடவடிக்கை கோரிக்கை!
சென்னை பூவிருந்தவல்லி (பூந்தமல்லி) பகுதியில் போக்குவரத்து உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வரும் கோபி என்பவர், Instagram இல் karate_gopi என்ற ஐடியில் செயல்பட்டு வருகிறார். இவர் காவல்துறை சீருடையில் துப்பாக்கி, பட்டா கத்தி, சுத்தியல் போன்ற ஆயுதங்களைக் கையில் ஏந்திய புகைப்படங்கள் மற்றும் வீடியோ ரீல்ஸ்களை பதிவேற்றியுள்ளார். இவை பல சினிமா பாடல்களுக்கு ஏற்றாற்போல் உருவாக்கப்பட்டுள்ளன.
இத்தகைய பதிவுகள் பொதுமக்களிடையே அச்ச உணர்வையும், காவல்துறை மீதான நம்பிக்கையைக் குறைக்கும் வகையிலும் உள்ளன. காவல்துறை சீருடை என்பது அதிகாரத்தின் அடையாளமாகவும், ஒழுக்கத்தின் சின்னமாகவும் விளங்குகிறது. அதைத் தனிப்பட்ட புகழ் அல்லது பொழுதுபோக்கிற்காகப் பயன்படுத்துவது தகாத செயலாகும்.தமிழக காவல்துறை தலைவர் (DGP) திரு. சங்கர் ஜிவால் IPS அவர்கள் 2025ஆம் ஆண்டு வெளியிட்ட சுற்றறிக்கையில், காவல்துறை அதிகாரிகள் சீருடையில் தனிப்பட்ட சமூக வலைதள கணக்குகளில் புகைப்படங்கள் அல்லது வீடியோக்களைப் பதிவிடக் கூடாது எனத் தெளிவாக உத்தரவிட்டுள்ளார்.

மேலும், அலுவல் தகவல்கள் அல்லது உத்தியோகபூர்வ பணிகளைத் தனிப்பட்ட சமூக ஊடகங்களில் பகிர்வதும் தடை செய்யப்பட்டுள்ளது. இதை மீறினால் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.தமிழக காவல்துறை நேர்மை, ஒழுக்கம், மக்கள் நலன் சார்ந்த பணியால் உருவாக்கப்பட்டது. இத்தகைய செயல்கள் காவல்துறையின் மரியாதையையும், நம்பகத்தன்மையையும் சீர்குலைக்கின்றன.
எனவே, பூவிருந்தவல்லி போக்குவரத்து உதவி ஆய்வாளர் கோபி மீது உடனடியாக விசாரணை நடத்தி, தேவையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.இத்தகவல் தொடர்பான பதிவுகள்/வீடியோக்கள் உண்மையாக இருந்தால், அவற்றை உடனடியாக அகற்றுவதோடு, அதிகாரிமீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கத் தமிழக காவல்துறை உயர் அதிகாரிகளை வலியுறுத்துகிறோம்.காவல்துறையின் ஒழுக்கத்தை காப்போம்! மக்கள் நம்பிக்கையைப் பேணுவோம் என்று கூறியுள்ளனர்.

