சூப்பர் சிங்கர் சீசன் 11-இல் கலக்கும் இளம் பாடகர் ஆபிரகாம் நித்திய பாண்டியன்!
சென்னை:
விஜய் டிவியின் பிரபலமான இசை ரியாலிட்டி ஷோ சூப்பர் சிங்கர் சீசன் 11-இல் தனது அற்புதமான குரலால் ரசிகர்களைக் கவர்ந்து வரும் இளம் பாடகர் ஆபிரகாம் நித்திய பாண்டியன். இசைமீது ஆழ்ந்த பற்றுகொண்ட இவர், பல்வேறு திறமைகளை வெளிப்படுத்தி உலகத் தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரியில் எம்.எஸ்.சி மைக்ரோபயாலஜி படித்த ஆபிரகாம் நித்திய பாண்டியன், பழம்பெரும் பின்னணிப் பாடகி பத்மினி பாண்டியன் என்பவரிடம் இசைப் பயிற்சி பெற்றுள்ளார்.
இவரது தந்தை ஜவஹர்லால் பிரெஞ்சு நாடகங்களை நடத்தி வருபவர். அவரிடமிருந்து நடிப்புப் பயிற்சி பெற்ற ஆபிரகாம், குழந்தை நட்சத்திரமாகவும் திரைப்படங்களில் நடித்துள்ளார். தந்தையிடமே இசைப் பயிற்சியையும் கற்றுத் தேர்ந்துள்ளார்.சிங்கப்பூரில் உள்ள ஏ.கே.டி கலை மன்றத்தில் நடிகராகவும், இசைக் கலைஞராகவும் பணியாற்றிய அனுபவம் கொண்ட இவர், ஏழு வயதிலேயே பின்னணிப் பாடகராக அறிமுகமானார். இலங்கைத் தமிழர்களுக்கான பாடல்களைப் பாடி, நார்வேயில் வெளியிடப்பட்ட ஆல்பத்தில் பங்கேற்று அனைவரின் பாராட்டுகளைப் பெற்றுள்ளார்.
பள்ளி மற்றும் கல்லூரி நாட்களில் நடைபெறும் இசைப் போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்று வென்று வந்த ஆபிரகாம், “இசைதான் முக்கியம், இசைதான் என் உயிர்மூச்சு” என்ற கொள்கையுடன் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
இதுவரை மனசுலாயோ… ராசாத்தி ஒன்ன… அன்பென்னும் மழையிலே… வெண்மதி வெண்மதி… பொன்மகள் வந்தால்… நெஞ்சுக்குள்ளே… விழியிலே பனி விழியிலே… ஆராரிராரோ… ஆராமலே போன்ற கிளாசிக் திரைப்படப் பாடல்களை அபாரமாகப் பாடி, உலகெங்கும் உள்ள தமிழ் ரசிகர்களின் இதயங்களில் இடம்பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நிருபர்: ஜெ. துரை

