வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு ..5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை !
வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததன் காரணமாக தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்ட ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
மேற்குதொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த கனமழை காரணமாகவும், முல்லை பெரியாறு அணையில் இருந்து தொடர்ந்து தண்ணீர் திறக்கப்படுவதாலும் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே அமைந்துள்ள வைகைஅணையின் நீர்மட்டம் 58 அடியிலிருந்து 66 அடியை எட்டியுள்ளது.
இதனால் தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்ட வைகை ஆற்றங்கரையோர மக்களுக்கு வைகை பொதுப்பணித்துறை அதிகாரிகள் அணையின் மேல் பகுதியில் உள்ள அபாய ஒலியை மூன்று முறை எழுப்பி முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்தனர்.
மேலும் தற்போதைய நிலவரப்படி வைகை அணை நீர்மட்டம் 66.01 அடியாகவுள்ளது என்றும், இது 68.5 அடியை எட்டியவுடன் இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையும், 69 அடியை எட்டியவுடன் மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுத்து அணையின் பாதுகாப்பு கருதி 71 அடி உயரம் கொண்ட வைகை அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட உள்ளதாக வைகை பொதுப் பணித்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தற்போது அணையின் நீர் வரத்து 1980 கன அடியாகவும், நீர் வெளியேற்றம் 869 கன அடியாகவும்,அணையின் நீர் இருப்பு 4818 மில்லியன் கன அடியாகவும் உள்ளது. வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ள வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் அணையில் குளிக்கவோ, இறங்கவோ கூடாது என மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

