திருவள்ளூர் சிறுமி பாலியல் குற்றவாளி அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் என தகவல் !
திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளி அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் என்று காவல்துறை தகவல் அளித்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரம்பாக்கத்தில் கடந்த 12 ஆம் தேதி 8 வயது சிறுமி பள்ளி முடிந்து தனது பாட்டியின் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.அப்போது அவரையே பின்தொடர்ந்து வந்த வடமாநில இளைஞர், அந்த சிறுமியை தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக சொல்லப்படுகிறது.
இதுதொடர்பான, சிசிடிவி காட்சிகள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியது. போலீசாருக்கு துப்பாகக் கிடைத்த ஒரேயொரு சிசிடிவி காட்சி இருந்தாலும், வேறு எங்கும் சிசிடிவிக்கள் இல்லாதது விசாரணையில் தொய்வை ஏற்படுத்தியது.
இதன்பின் வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் நேரடி மேற்பார்வையில் முதலில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் குற்றவாளியைத் தேடி வந்த நிலையில், விசாரணையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாததால், தனிப்படைகளின் எண்ணிக்கை 20-ஆக அதிகரிக்கப்பட்டது.
இதனையடுத்து, ஏஐ தொழில்நுட்பத்தின் உதவியுடன் அந்த இளைஞரின் புகைப்படத்தை உருவாக்கி அதனை வெளியிட்டு, இதுகுறித்து தகவல் கொடுப்பவருக்கு 5 லட்ச ரூபாய் சன்மானம் அளிக்கப்படும் என்று போலீசார் அறிவித்தனர். இதன்பின் தேடப்படும் நபரின் உருவ அமைப்பு சூலூர்பேட்டையில் உள்ள தாபா ஒன்றில் பணியாற்றும் நபருடன் ஒத்துப் போவதாக காவல்துறை எண்ணிற்கு ஒரு தகவல் அளிக்கப்பட்டது.
அதன்பெபெரில் அங்கு சென்று போலீசார் அந்த நபரை சுற்றி வளைத்து பிடித்து கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், அவர், அசாம் மாநிலத்தை சேர்ந்த ராஜு பிஸ்வகர்மா என்பது தெரியவந்துள்ளது. மேலும், குற்றவாளியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் பணிகள் நடந்து வருவதாக வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் கூறியுள்ளார்.

