திருவான்மியூரில் ஸ்டேட் வங்கி ஏ.டி.எம் இயந்திரத்தில் திருட முயன்ற வடமாநிலத்தவர்கள் கைது !

சென்னை திருவான்மியூரில் ஸ்டேட் வங்கி ஏ.டி.எம். இயந்திரத்தில் முறைகேடாக பணத்தை திருட முயன்ற உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த குல்தீப் சிங், பிரிட்ஜ் பான், ஸ்மித் யாதவ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை, திருவான்மியூர் திருவள்ளூர் நகரில் அமைந்துள்ள எஸ்பிஐ ஏடிஎம் ஒன்றில், மர்மமான முறையில் பணம் எடுக்கப்பட்டு வருவதாக எஸ்பிஐ நிறுவனத்தை சார்ந்தவர்கள் புகார் அளித்தனர்.
திருவான்மியூரில் அமைந்துள்ள ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து பணம் வெளியே வரும் பகுதியில் வட மாநிலத்தைச் சேர்ந்த இருவர் கருப்பு நிற அட்டையை ஒட்டிவைத்துள்ளனர்.
யாரேனும் பணம் எடுக்க ஏடிஎம் இயந்திரத்துக்கு வந்தால், பணம் வெளியே வராது. இதனால், அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றுவிடுவார்கள். பிறகு, இவர்கள் உள்ளே சென்று, அந்த அட்டையை எடுத்துவிட்டு பணத்தை எடுத்துக் கொள்வர்.
இந்த கொள்ளை தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் அருகிலுள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து அதனடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதையடுத்து ஏடிஎம்-ல் கொள்ளையடித்த நபர்கள் யார் என கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர் இந்த கொள்ளை தொடர்பாக உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த குல்தீப் சிங், பிரிட்ஜ் பான், ஸ்மித் யாதவ் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருவான்மியூர் மட்டுமல்லாது தாம்பரத்திலும் இதே போன்ற நூதன முறையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. மேலும் இவர்கள் வேறு எங்கெல்லாம் இதுபோன்று ஈடுபட்டனர் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.