துணைவேந்தர் நியமிக்கும் அதிகாரத்திற்கு இடைக்கால தடை-சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி !

தமிழ்நாடு பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர் நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்கி இயற்றப்பட்ட சட்டப்பிரிவுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்கி தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய சட்டத்துக்கு உச்ச நீதிமன்றம் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி ஒப்புதல் அளித்தது.
இதையடுத்து, துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பான சட்டங்களை அரசிதழில் தமிழ்நாடு அரசு வெளியிட்டது. இந்த சட்டத்தை எதிர்த்து திருநெல்வேலியைச் சேர்ந்த வெங்கடாஜலபதி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், பிரதான மனுவுக்கு பதிலளிக்குமாறு அரசுக்கு உத்தரவிட்டு, இடைக்கால தடை கோரிய மனு மீதான விசாரணையை தள்ளிவைத்திருந்தது. இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் லட்சுமி நாராயணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழ்நாடு அரசுத் தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், தமிழ்நாடு அரசின் சட்டங்களுக்கு தடை கோரிய மனுவுக்கு பதிலளிக்க அரசுத் தரப்புக்கு அவகாசம் வழங்க வேண்டும்.
சட்டங்கள் அரசிதழில் வெளியிடப்பட்ட பிறகு, மொத்தமுள்ள 10 பல்கலைக்கழகங்களில் இரு பல்கலைக்கழகங்களுக்கு மட்டுமே துணைவேந்தர் தேடுதல் குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்த குழு விண்ணப்பங்களை வரவேற்று விளம்பரம் வெளியிட்டுள்ளது.
அதுவும், ஜூன் 10ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கூறப்பட்டுள்ளது. அதனால் தடை கோரிய வழக்கில் பதிலளிக்க அரசுத்தரப்புக்கு அவகாசம் வழங்க வேண்டும் எனக் கோரினார். தமிழ்நாடு உயர்கல்வித் துறை தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், துணைவேந்தர் நியமனம் தொடர்பான பல்கலைக்கழக மானியக் குழு விதிகளை எதிர்த்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
அதனால் இந்த வழக்குகளை உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை அவசரமாக விசாரிக்க எந்த அவசியமும் இல்லை. பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த மனுதாரர், அரசியல் உள்நோக்கத்துடன் இந்த வழக்கை தாக்கல் செய்திருக்கிறார்.
தடை கோரிய மனுக்களுக்கு பதிலளிக்க அவகாசம் தராமல் விசாரிப்பது முறையற்றது, நியாயமற்றது, அநீதியானது. வானம் இடிந்து விழுந்து விடாது என கடுமையான ஆட்சேபம் தெரிவித்தார்.
இதனையடுத்து அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், துணைவேந்தர்களை நியமிக்கும் வேந்தரின் அதிகாரத்தை அரசுக்கு வழங்கி நிறைவேற்றப்பட்ட சட்டப் பிரிவுகளுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.