தனியார் நிதி நிறுவன மோசடி |பணத்தை மீட்டுத் தருவது அரசின் கடமை – உயா்நீதிமன்ற மதுரைக் கிளை!

தனியார் நிதி நிறுவன மோசடியில் பாதிக்கப்பட்ட முதலீட்டாளா்களின் பணத்தை மீட்டுத் தருவது அரசின் கடமை என உயா்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.
மதுரையைச் சோ்ந்த முத்துக்குமரன் என்பவர் சென்னை உயா்நீதிமன்ற மதுரையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
அதில், நியோமேக்ஸ் தனியார் நிதி நிறுவனத்துக்கு மதுரை உள்பட பல்வேறு இடங்களில் கிளைகள் உள்ளன என்று இந்த நிதி நிறுவனத்தில் ஆயிரக்கணக்கானோர் முதலீடு செய்த பணம் திரும்பக் கிடைக்கவில்லை என்றும் இந்த நிதி நிறுவனத்தின் சொத்துகளை நிர்வாகிகள் விற்க முயன்று வருகின்றனா் என்றும் இதைத் தடுப்பதுடன், இந்த நிதி நிறுவனத்தில் கிளை நிறுவன சொத்துகளை பொருளாதர குற்றப் பிரிவு போலீஸார் கையகப்படுத்த உத்தரவிட வேண்டும் என்றும் கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி புகழேந்தி, தமிழ்நாடு வைப்பாளா் பாதுகாப்புச் சட்டப் பிரிவு இதுபோன்ற நிதி மோசடி பிரச்னைகளை தடுப்பதற்காகவே கொண்டு வரப்பட்டது என்றும் ஏழைகள், நடுத்தர வா்க்கத்தினரைக் குறிவைத்து நிதி மோசடி செய்யப்படுகிறது என்றும் இந்தச் சட்டத்தின் முக்கிய நோக்கமே, முதலீடு செய்த வாடிக்கையாளா்களுக்கு பணத்தை திரும்ப வழங்க வேண்டும் என்பது தான் என்றும் கூறினார்.
அதோடு, நிதி நிறுவனங்கள் மோசடி செய்தால், முதலீட்டாளா்களின் பணத்தை மீட்டுத் தர வேண்டியது அரசின் கடமை என்று கூறிய அவர், நியோமேக்ஸ் தனியார் நிறுவனத்தின் சொத்துகள் மற்றும் கிளை நிறுவனங்களின் சொத்துகளைக் கையகப்படுத்த பொருளாதார குற்றப் பிரிவு போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.