பூப்பெய்திய மாணவியை வெளியே அமர வைத்த விவகாரம் – தலைமை ஆசிரியர் தற்காலிகமாக பணி நீக்கம் !

பொள்ளாச்சியில் பூப்பெய்திய மாணவியை வெளியே அமர வைத்த விவகாரத்தில், பள்ளி முதல்வர் உள்ளிட்ட மூன்று பேர் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே செங்குட்டைபாளையத்தில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது.
இங்கு எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் ஏப்ரல் 5ம் தேதி பூப்பெய்தி உள்ளார். இச்சூழலில் தற்போது முழு ஆண்டு தேர்வுகள் நடைபெற்று வருவதால் மாணவி தேர்வு எழுதுவதற்காக பள்ளிக்கு வழக்கம்போல சென்றுள்ளார்.
ஆனால், பள்ளி நிர்வாகத்தினர் மாதவிடாயை காரணம் காட்டி மாணவியை வகுப்பறைக்குள் அனுமதிக்காமல் வகுப்பறையின் வாசலிலேயே அமர வைத்து தேர்வு எழுத வைத்துள்ளனர்.
இந்நிலையில், மாணவியைப் பார்ப்பதற்காக வந்த அவரது தாய் மற்றும் உறவினர் சென்று மாணவியிடம் இதுதொடர்பாக பேசி வீடியோ பதிவு செய்து வெளியிட்டுள்ளனர்.
தற்போது, சமூக வலைத்தளங்களில் இந்த விடியோ வைரலாகி வருகிறது. இதுகுறித்து கல்வித் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்த நிலையில், மாவட்ட கல்வி உதவி இயக்குநர் உள்பட அதிகாரிகள் பள்ளியில் விசாரணை மேற்கொண்டனர்.
இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்த நிலையில் தற்போது பள்ளியின் தலைமை ஆசிரியர் தற்காலிகமாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
அதைத் தொடர்ந்து, இந்த விவகாரத்தில், பள்ளி முதல்வர் உள்ளிட்ட மூன்று பேர் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே, மாணவியின் வீடியோவை சமூக வலைதளங்களில் பரப்பியவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என பொள்ளாச்சி காவல் உதவி கண்காணிப்பாளர் சிருஷ்டிசிங் தெரிவித்துள்ளார்.