உதகையில் குவியும் சுற்றுலா பயணிகள் !

கோடைக்காலம் துவங்கியுள்ள நிலையில், வார விமுறையையொட்டி உதகை தாவரவியல் பூங்காவில் அதிகளவிலான சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்திற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். அதுவும் கோடைக்காலங்களில் திரளான மக்கள் வந்து இயற்கையை ரசித்துச் செல்வது வழக்கமாக உள்ளது. இங்கு வரும் சுற்றுலா பயணிகள், உதகை அரசு தாவரவியல் பூங்கா, நூற்றாண்டு ரோஜா பூங்கா, படகு இல்லம் ,தொட்டபெட்டா மலை சிகரம் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தளங்களை கண்டு ரசித்து செல்கின்றனர்.

இந்நிலையில், நேற்று வார விடுமுறை என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் உதகையில் குவிந்தனர். இயற்கை எழில் சூழ்ந்த உதகை அரசு தாவரவியல் பூங்காவில் நிலவும் இதமான கால நிலையை அனுபவித்ததோடு, பூங்காவில் உள்ள புல் மைதானத்தில் ஓய்வெடுத்தும், அங்குள்ள கண்ணாடி மாளிகையில் பூத்துக் குலுங்கும் வண்ண, வண்ண மலர்களை கண்டு ரசித்தும், புகைப்படங்கள் எடுத்தும் மகிழ்ந்தனர்.